பாகிஸ்தான், சௌதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து புதிய ராணுவக் கூட்டணி ஒன்றை உருவாக்க ஆலோசித்து வரும் நிலையில், அதில் இரான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளும் இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த நகர்வில், கூட்டணியில் இணைவதற்காக இரான் முக்கிய நிபந்தனை ஒன்றை முன்வைத்துள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, இதுபோன்ற பாதுகாப்பு ஒப்பந்தங்களில் இரானும் எகிப்தும் தவிர்க்க முடியாத முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. ஆனால், சாதாரண உறுப்பினர்களாக இல்லாமல், இணை நிறுவன உறுப்பினர்களாகவே (Co-founding members) தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் இரான் உறுதியாக உள்ளது. அதாவது, கூட்டணியின் கொள்கைகள் மற்றும் கையெழுத்திடப்படும் அதிகாரப்பூர்வ ஆவணங்களை உருவாக்கும்போதே தங்களின் கருத்துகளும் யோசனைகளும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என இரான் நிபந்தனை விதித்துள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் ஆசிய பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில், இந்த நாடுகள் கைகோர்ப்பது உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இரானின் இந்த நிபந்தனையை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், உலக அரசியலில் ஒரு புதிய சக்திவாய்ந்த ராணுவக் கூட்டணி உருவெடுக்கும் எனக் கருதப்படுகிறது.