ஜெர்மனியின் மிகவும் பரபரப்பான ஃபிராங்க்ஃபர்ட் சர்வதேச விமான நிலையத்தில் அரங்கேறியுள்ள ஒரு அரிய சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்த விமானம் ஒன்றில் ஊடுருவிய ஆபத்தான மலேரியா கொசுவால் கடிபட்டு, அங்கு பணியாற்றிய ஆறு ஊழியர்கள் கடுமையான நோய்த்தொற்றுக்கு ஆளாகினர். இதில் தீவிர சிகிச்சையில் இருந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வழக்கமாக மலேரியா பாதிப்பு இல்லாத ஐரோப்பிய நாடுகளில், இதுபோன்று விமானங்கள் மூலமாக வெளிநாடுகளிலிருந்து கொசுக்கள் கடத்தப்பட்டு நோய் பரவுவது ‘விமான நிலைய மலேரியா’ (Airport Malaria) என்று மருத்துவ உலகத்தால் அழைக்கப்படுகிறது. தற்பாேது பாதிக்கப்பட்ட மற்ற நான்கு ஊழியர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விமான நிலைய வளாகம் முழுவதும் கொசுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சர்வதேச விமானப் பயணங்களின் போது கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகள் ஊடுருவுவதைத் தடுக்க விமானங்களில் மேற்கொள்ளப்படும் கிருமிநாசினி தெளிப்பு முறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சர்வதேச விமான நிலையங்களில் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பரிசோதனைகளின் முக்கியத்துவத்தை மீண்டும் உலகிற்கு நினைவூட்டியுள்ளது.