இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் சீனா மற்றும் துருக்கி நாடுகளின் தொழில்நுட்ப உதவியுடன் புதிதாகப் பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது. எல்லைப் பகுதிகளில் அதிகரித்து வரும் ட்ரோன் மற்றும் பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கில் இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளையில், இந்தியாவின் அதிவேக ‘பிரம்மோஸ்’ சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளைத் தடுக்கும் திறன் பாகிஸ்தானின் இந்த புதிய அமைப்பிற்கு உள்ளதா என்ற கேள்வி பாதுகாப்பு வட்டாரங்களில் எழுந்துள்ளது. இதுகுறித்து ராணுவ வல்லுநர்கள் தெரிவிக்கையில், ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் அளவுக்கு இந்த புதிய அமைப்பின் தொழில்நுட்பம் மேம்பட்டதாக இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருப்பினும், குறைந்த உயரத்தில் பறக்கும் ட்ரோன்கள் மற்றும் சிறு ரக தாக்குதல்களை எதிர்கொள்ள இது ஒரு வலுவான அரணாகச் செயல்படும். சர்வதேச நாடுகளின் உதவியுடன் பாகிஸ்தான் தனது வான் பாதுகாப்பைப் பலப்படுத்த முயற்சி செய்தபோதிலும், இந்தியாவின் முன்னணி ஏவுகணை தொழில்நுட்பத்திற்கு ஈடுகொடுக்க முடியாது என்பதே நிலவரமாக உள்ளது.