தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக அரசியல் களத்தில் பல்வேறு எதிர்பாராத திருப்பங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. அந்த வகையில் மாநில தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகை, அந்த பொறுப்பில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளார். தேர்தல் முடிவுகளுக்கு முன்பாகவே அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாக பேசி இருந்தார். இந்நிலையில் இது சம்பந்தமாக தற்போது புதிய தகவல் ஒன்றினை பகிர்ந்துள்ளார்.சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகவே திமுக, காங்கிரஸ் கூட்டணியில் குழப்பங்கள் நீடித்தது. காங்கிரஸ் கட்சியை சார்ந்த மூத்த நிர்வாகிகள் சிலர், மாநில தலைவரையும் மீறி திமுக கூட்டணி குறிட்டு விரும்பத்தகாத விமர்சனங்களை முன்வைத்தனர். இது செல்வப்பெருந்தகைக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியது. இதனிடையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக எம்பி ஜோதிமணி வெளிப்படையாகவே சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.அவை மாநில தலைவரான செல்வப்பெருந்தகையை நேரடியாக அட்டாக் செய்யும் விதமாக அமைந்தது. இதனையடுத்து தேர்தலுக்கு பின்பாக தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாக கடந்த ஏப்ரல் மாதமே அறிவித்தார் செல்வப்பெருந்தகை. அவருடைய இந்த திடீர் அறிவிப்பு தேர்தல் காலத்தில் மிகப்பெரிய அளவில் பரபரப்பினை கிளப்பி இருந்தது. இந்நிலையில் தேர்தல் முடிந்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் மாநில தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகை விலகுவது தொடர்பான பேச்சுக்கள் மறுபடியும் எழுந்துள்ளன.இது சம்பந்தமாக கடந்த சில நாட்களாக விவாதம் நடந்து வரும் நிலையில், தற்போது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக செல்வப்பெருந்தகை செய்தியாளர் ஒருவரிடம் பேசியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில், நேற்றைய தினம் பெங்களூரில் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்த்து திடீர் சந்திப்பு இல்லை. அடிக்கடி எங்களுடைய தேசிய தலைவரை தலைவரை சந்திப்பது வழக்கமான ஒன்று தான். ஏற்கனவே தேர்தலுக்கு முன்பாக, பதவியில் இருந்து விலகுவதாக சொல்லி இருந்தேன்.எங்களுடைய தலைமையிடமும் அதுப்பற்றி கூறினேன். நேற்று இது சம்பந்தமான விவாதம் நடந்தது என வெளிப்படையாக தெரிவித்துள்ளார் செல்வப்பெருந்தகை. அதோடு, தற்போது கொஞ்சம் காத்திருங்கள். தானே கூப்பிடுவதாக மல்லிகார்ஜுன கார்கே கூறியிருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இன்னும் தலைவர் பதவிக்கான காலம் என்பது 6,7 மாதங்கள் உள்ளது. அப்படி இருக்கையில் எதற்காக நீங்களாகவே இந்த முடிவினை எடுக்கிறீர்கள் என்று கேட்ப்பட்டது.அதற்கு தேர்தலுக்கு முன்பாகவே நான் சொல்லி விட்டேன். சில கசப்புணர்வுகள். நண்பர்கள் புரிதல் இல்லாமல் பேசி விட்டனர். இதனால் என்னுடைய உள்மனது இது மாதிரி ஒரு பதவியில் இருந்தால் யார் வேணாலும், என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். எனவே தலைவராக நீடிக்க வேண்டாமென என்னுடைய மனது சொன்னது. இதனால் தான் ஏப்ரல் முதல் வாரத்திலே இதனை சொல்லி விட்டேன். இதன்பின்னர் தலைமை எனது கோரிக்கையை ஏற்று, தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கும் என்று நம்புவதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மேலும் , ஜோதிமணி, அமைச்சர் விஸ்வநாதன் தன்னை பற்றி தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வருவது தொடர்பாக கேள்விக்கு, ஒரு நாள் உங்களிடம் மனம் விட்டு பேசுவேன். அதுவரை காத்திருங்கள் என தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேட்டி தற்போது பெரியளவில் அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்து வருவது. அதோடு மாநில தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் செல்வப்பெருந்தகை உறுதியாக உள்ளதும் இதன் மூலமாக தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

