மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் 29 ஆண்கள் தற்கொலை செய்து கொண்டதாக பரவி வரும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, சமீபத்தில் பதிவான 29 ஆண்களின் தற்கொலை வழக்குகளில், திருமணம் சார்ந்த பிரச்னைகளும் ஒரு முக்கிய காரணியாக இருந்தது தெரியவந்துள்ளது.
இந்த அதிர்ச்சித் தகவல் வெளியானதை தொடர்ந்து, ஜல்கான் பகுதி மக்களிடையே “இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு மணமகள் கிடைப்பது பெரும் சவாலாக உள்ளது” என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ளது. சமூகப் பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் பாலின விகிதக் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் இளைஞர்களுக்கு திருமணம் நடப்பதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த தற்கொலைகளுக்கு மணமகள் கிடைக்காதது மட்டுமே காரணமா அல்லது இதன் பின்னணியில் கடுமையான மன அழுத்தம் உள்ளிட்ட வேறு சமூகப் பிரச்னைகள் உள்ளனவா என்பது குறித்து சிறப்பு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.