ரூ. 25,000 வரை இழப்பீடு கிடைக்கும்!
டிஜிட்டல் மோசடி தொடர்பான விதிமுறைகளை விரிவுபடுத்தியுள்ள ரிசர்வ் வங்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் புதிய முறையையும் அமல்படுத்தியுள்ளது. புதிய விதிமுறைகளின்படி, மோசடியான மின்னணு வங்கிப் பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 50,000 வரை இழப்பைச் சந்திக்கும் தனிநபர்கள் மொத்த இழப்பில் 85 சதவீதம் வரை இழப்பீடு பெறலாம். இருப்பினும், இந்த இழப்பீட்டுத் தொகை அதிகபட்சமாக ரூ. 25,000 வரை மட்டுமே வழங்கப்படும். மேலும், ஒரு நபர் தனது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே இத்திட்டத்தின் பலனைப் பெற முடியும்.
இந்தச் சலுகை எப்போது கிடைக்கும்?
ஒருவரின் கடவுச்சொல் (password) அல்லது ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் (OTP) ஆகியவற்றை மோசடியாகத் திருடி மேற்கொள்ளப்படும் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். ஒரு நபர் கட்டாயப்படுத்தப்பட்டோ அல்லது மிரட்டப்பட்டோ பரிவர்த்தனை செய்ய வைக்கப்பட்ட சூழல்களும் இதில் அடங்கும்.
விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, திருத்தப்பட்ட இந்த வழிகாட்டுதல்கள் 2027ஆம் ஆண்டின் ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து, அனைத்து வங்கிகளும் டிஜிட்டல் மோசடி தொடர்பான வழக்குகளில் இந்த புதிய விதிகளின் கீழ் நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறையையும் பின்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.
விசாரணைக்கான காலக்கெடு!
புதிய கட்டமைப்பின் கீழ், நாட்டிற்குள் நடைபெறும் டிஜிட்டல் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணையை வங்கிகள் 45 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். சர்வதேச அல்லது எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரையில், விசாரணைக்கான காலக்கெடு 60 நாட்களாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை வங்கி வாடிக்கையாளருக்குத் தெரிவிக்க வேண்டும்.
கிரெடிட் கார்டு மோசடியில் நிவாரணம்!
கிரெடிட் கார்டு மோசடி தொடர்பான புகார்கள் பெறப்பட்ட ஐந்து நாட்களுக்குள் சர்ச்சைக்குரிய தொகையைத் தற்காலிகமாகத் திரும்பப் பெறுதல் அல்லது 'நிழல் ரீஃபண்ட்' (shadow refund) எனப்படும் தற்காலிகத் தொகையை வங்கி வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு உடனடி நிவாரணம் அளிப்பதோடு அவர்களின் இழப்பைத் தற்காலிகமாகக் குறைக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு விதிமுறைகள்!
500 ரூபாய்க்கு மேற்பட்ட அனைத்து மின்னணுப் பரிவர்த்தனைகளுக்கும் உடனடி SMS எச்சரிக்கைகளை அனுப்பும் நடைமுறையை ரிசர்வ் வங்கி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. முக்கியமாக, ஸ்மார்ட்போன் அல்லது இணைய வசதி இல்லாத வாடிக்கையாளர்களுக்கு, வங்கித் தகவல்களைப் பெறுவதற்கான ஒரே மின்னணு வழியாக SMS சேவை தொடர்ந்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

