சீர்குலைந்த மின்துறையை மீட்டெடுத்த திமுக அரசு
செய்தியாளர் சந்திப்பில் பேசிய செந்தில் பாலாஜி, "முந்தைய அதிமுக ஆட்சியில் நலிவடைந்த நிலையில் இருந்த மின்சாரத் துறையை மீட்டெடுக்கவும், அதனை மேம்படுத்தவும் திராவிட மாடல் அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை மேற்கொண்டது. திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்குப் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.முதலமைச்சராக இருந்த மு. க. ஸ்டாலின், மின்துறையைத் தனதுயைப் போலக் கருதி, அதன் ஒவ்வொரு செயல்பாட்டையும் மிக உன்னிப்பாகக் கவனித்து வழிகாட்டினார். இதன் காரணமாகவே, தமிழ்நாட்டில் மின்சாரத்திற்கான தேவை தொடர்ந்து பல மடங்கு அதிகரித்த போதிலும், எவ்விதத் தடையுமின்றி பொதுமக்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்க முடிந்தது" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
வெள்ளை அறிக்கையில் செலவினங்கள் மறைப்பு
தற்போது தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை ஒரு ஏமாற்று வேலை என்று சாடிய அவர், "தங்களுக்குச் சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக, மின்சார வாரியத்தின் உண்மையான செலவினங்களை மறைத்து இந்த வெள்ளை அறிக்கையை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். ஆனால், மின்சாரம் அதிக விலை கொடுத்து வாங்கப்படவில்லை என்பது இந்த வெள்ளை அறிக்கையின் மூலமாகவே தங்களுக்குத் தெரியவந்துள்ளது.கோடைக்காலமான மூன்று மாதங்களில் மட்டும்தான் தமிழ்நாட்டில் மின்சாரத் தேவை மிக உச்சத்தில் இருக்கும். அந்த குறுகிய காலத் தேவைக்கு, தற்காலிக மற்றும் குறுகிய கால ஒப்பந்தங்களை மேற்கொள்வதே பொருளாதார ரீதியாகச் சரியானது. அப்படி இருக்கும்போது, தேவையில்லாமல் நீண்ட கால ஒப்பந்தங்களை மேற்கொள்வோம் என்று தற்போதைய மின்துறை அமைச்சர் கூறுவது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.
கடனைப் பற்றிய உண்மைகள்
கடந்த காலக் கடன்கள் குறித்துப் பேசிய அவர், "அதிமுக ஆட்சிக் காலத்தில் மட்டும் மூன்று முறை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டில் திமுக அரசு பொறுப்பேற்கும் போதே, மின்சார வாரியம் சுமார் 1.59 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்துக் கொண்டிருந்தது.மின் வாரியத்தில் மின்சாரக் கொள்முதல் உள்ளிட்ட தவிர்க்க முடியாத அதிகரித்துள்ள நிலையிலும், திமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறையைக் கணிசமாகக் குறைத்துக் காட்டினோம். தடையற்ற மின்சாரத்தையும் உறுதி செய்தோம். இந்த உண்மைகளை எல்லாம் தற்போதைய அரசு மறைக்கிறது" என்றார்.
'ரீல்ஸ்' வெளியிடும் தவெக அரசு
மின்துறையில் வழங்கப்பட்ட புதிய பணி நியமன ஆணைகள் குறித்துப் பேசிய செந்தில் பாலாஜி, தற்போதைய முதலமைச்சர் ச. ஜோசப் விஜயின் நிர்வாகத்தைக் கடுமையாக விமரிசித்தார்."ஏதோ கடந்த இத்தனை ஆண்டுகளில் மின்சார வாரியத்தில் யாருக்குமே பணி உயர்வுகளோ, நியமனங்களோ வழங்கப்படாதது போல தற்போதைய அமைச்சர் பேசி வருகிறார். கடந்த ஆட்சிக் காலத்தின் இறுதியில் தேர்தல் அறிவிப்பு (Model Code of Conduct) வெளியான காரணத்தினாலேயே சில பணி நியமனங்களையும், பதவி உயர்வுகளையும் எங்களால் இறுதி செய்ய முடியாமல் போனது."மேலும் அவர் கூறுகையில், "நேற்று முதல்வர் விஜயின் கரங்களால் பெற்ற ஊழியர்கள் அனைவரும் திமுக ஆட்சிக் காலத்திலேயே முறைப்படி தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆவர். ஆனால், தவெக அரசு ஏதோ தாங்கள் பொறுப்பேற்ற இந்த 40 நாட்களுக்குள் புதிய அறிவிப்பை வெளியிட்டு, தேர்வு நடத்தி, முடிவுகளையும் அறிவித்து, ஆட்களைத் தேர்வு செய்தது போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறது. 'வெளிப்படையாகத் தேர்வு நடந்தது' என்று அவர்கள் போலிப் பெருமையுடன் சமூக வலைத்தளங்களில் 'ரீல்ஸ்' வெளியிட்டு வருகிறார்கள்" என்று சாடினார்.விளம்பர அரசியல்மின்துறையின் உண்மையான நிலைமையை மறைத்து, விளம்பர அரசியலில் தவெக அரசு ஈடுபட்டு வருவதாக செந்தில் பாலாஜி தனது பேட்டியில் குற்றம் சாட்டினார். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பலன்களைத் தங்களின் சொந்தச் சாதனையாகக் காட்டும் முயற்சியை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியல் களத்தில் மின்சாரத் துறை சார்ந்த விவாதங்களை மீண்டும் சூடாக்கியுள்ளது.

