மும்பையில், மொஹரம் ஊர்வலத்தின் போது, பொதுமக்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி மாத்திரைகள் என்றும், வலி நிவாரணிகள் என்றும் பொய் சொல்லி எலிகளை கொல்ல பயன்படுத்தும் விஷ மாத்திரைகளை விநியோகம் செய்து ஆயிரக்கணக்கானோரைக் கொல்ல முயற்சி செய்த 39 வயதுடைய நபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.மேலும், மக்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த சுமார் 14,900 விஷ மாத்திரைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனால், ஏற்படவிருந்த மிகப்பெரிய அசம்பாவிதமும், பேரழிவும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. என்ன நடந்தது? யார் அந்த நபர்? எதனால் மக்களுக்கு விஷ மாத்திரைகளை கொடுத்தார்? என்பது குறித்து பார்ப்போம்.மஹாராஷ்டிராவில் மும்பையின் பைகுல்லா மற்றும் ரே ரோடு பகுதியில், கடந்த 26 ஜூன் 2026 அன்று மொஹரம் ஊர்வலம் நடைபெற்றது. ஆரம்பத்தில் நன்றாக சென்றுக் கொண்டிருந்த இந்த ஊர்வலத்தில், திடீரென சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவர்களை உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அனைவரும் எலி மருந்து உட்கொண்டது தெரியவந்தது.இதையடுத்து, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதால் உயிரிழப்பு தடுக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, மொஹரம் ஊர்வலத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மர்ம நபர் ஒருவர் மாத்திரைகளை விநியோகிப்பதை சமூக ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து ஒலிபெருக்கி மூலம் அந்த மாத்திரைகளை யாரும் உட்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்ததுடன், போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.அதைத் தொடர்ந்து, ஊர்வலத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், மாத்திரைகளை விநியோகித்த நபரை கையும் களவுமாக பிடித்தனர். மேலும், அவரிடம் இருந்த சுமார் 14,900 விஷ மாத்திரைகளையும், அதற்கு பயன்படுத்தப்பட்ட மருந்துகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் புனேயைச் சேர்ந்த பயாஸ் பிரேம்ஜி (39) என்பது தெரியவந்தது.பெயின்ட் வியாபாரியான இவர், மொஹரம் ஊர்வலத்தில் இருந்த பொதுமக்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி மாத்திரைகள் என்றும், வலி நிவாரணிகள் என்றும் பொய் சொல்லி மாத்திரைகளை விநியோகித்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இதற்காக பிரேம்ஜி ஆன்லைன் மூலம் 30,000 காலி கேப்சூல்களையும், தனது தொழில் தொடர்புகளை பயன்படுத்தி 50 கிலோ சிங்க் பாஸ்பைடு கெமிக்கலையும் வாங்கி இருக்கிறார்.கடந்த 15 நாட்களாக மும்பையில் தங்கிருந்து இந்த விஷ மாத்திரைகளை தயாரித்துள்ளார். மேலும், அந்த விஷ மாத்திரைகளை மொஹரம் ஊர்வலத்தில் பங்கேற்ற பொதுமக்களுக்கு கொடுத்து, அவர்களை கொல்ல சதித் திட்டமிட்டதும் விசாரணையில் அம்பலமானது. பட்டதாரியான இவர் சமீபத்தில் சில வெளிநாடுகளுக்கும் சென்று வந்துள்ளதால், இந்தச் செயலுக்கு பின்னாடி ஏதேனும் அமைப்பு ரீதியான தூண்டுதல் இருக்கிறதா அல்லது வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜிங்க் பாஸ்பைடு ஒரு நச்சு வேதிப்பொருள். இதை உட்கொள்ளும்போது இரைப்பை அமிலத்துடன் வினைபுரிந்து பாஸ்பைன் வாயுவை உண்டாக்கும். இந்த வாயு இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள், மூளையை பாதித்து பிறகு உயிரை பறிக்கும் அளவிற்கு கொடியது.

