அமர்நாத் யாத்திரை தொடக்கம்
குறிப்பாக இந்த அமர்நாத் யாத்திரை வழித்தடம் என்பது பஹல்காமில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சந்தன்வாரியில் தொடங்குகிறது . இந்த பகுதி பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாத தாக்குதல் அதிகம் நடத்தும் பகுதியாக உள்ளது. கடந்த ஆண்டு பஹல்காமில் உள்ள பள்ளத்தாக்கில் நுழைந்து சுற்றுலா பயணிகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக எப்போது இந்த பகுதி உச்சக்கட்ட பாதுக்காப்பு வலையத்திற்குள் வைக்கப்பட்டு இருக்கும். இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு, இன்று முதல் யில் தனியார் மற்றும் பொதுப் போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் போக்குவரத்து கட்டுப்பாடு
அடுத்த இரண்டு மாதங்களுக்கு, கனரக வாகனங்கள் மாற்று நாட்களில் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும். அதுவும் குறிப்பிட்ட நேரங்களிலும், அன்றைய போக்குவரத்து நிலையைப் பொறுத்தும் அனுமதி வழங்கப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.தனியார் கார்கள் மற்றும் பயணிகள் வாகனங்கள், வாகன அணிவகுப்பு செல்லாத நேரங்களில் மட்டுமே தேசிய நெடுஞ்சாலையில் இயக்க அனுமதிக்கப்படும். இதனால் பொதுமக்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கனரக வாகனங்கள் மாற்று நாட்களில் மட்டுமே இயக்கப்பட வேண்டும். மேலும், மாலை 7 மணிக்குப் பிறகு காஜிகுண்ட் அல்லது உதம்பூர் மாவட்டத்தின் ஜகேனிபகுதிகளில் இருந்து எந்த கனரக வாகனமும் புறப்பட அனுமதிக்கப்படாது.
வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை
- இதேபோல், காஜிகுண்டிலிருந்து ஜம்மு நோக்கிச் செல்லும் இலகுரக வாகனங்கள், பால்தால் யாத்திரை வாகன அணிவகுப்பின் கடைசி வாகனம் மரோக் பகுதியைக் கடந்த பிறகே செல்ல அனுமதிக்கப்படும்.
- அதேபோல், ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கிச் செல்லும் வாகனங்கள், யாத்திரை அணிவகுப்பின் கடைசி வாகனம் உதம்பூரின் ஜகேனி பகுதியைக் கடந்த பிறகே அனுமதிக்கப்படும்.
- இந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக பயணிகள் போக்குவரத்து மட்டுமின்றி, காய்கறி, பழங்கள், கால்நடைகள் உள்ளிட்ட விரைவில் கெடக்கூடிய பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களும் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எனவே, சரக்கு வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தங்களது பயணத்தை அதற்கேற்ப திட்டமிடுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- மேலும், குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு மாவட்டத்திற்குள் உள்ளூர் மக்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தால், அவர்களின் அடையாள அட்டையை சரிபார்த்த பிறகே அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதற்கிடையில், அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்காக ஜம்மு-காஷ்மீரில் ஏற்கனவே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராணுவம் மற்றும் மாநில காவல்துறையுடன் சேர்த்து மத்திய துணை ராணுவப் படையின் கூடுதலாக 670 கம்பெனிகள், அதாவது சுமார் 67,000 வீரர்கள், யாத்திரை பாதுகாப்பு பணிக்காக களமிறக்கப்பட்டுள்ளனர்.

