அதிமுக தொடர்ந்து பலவீனம் அடைந்து வரும் நிலையில், கட்சியை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் இருந்து மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மற்றும் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இதனையடுத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி கொண்டிருக்கிறார். இந்நிலையில் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியமான கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளனர்.சட்டப்பேரவை தேர்தலில் 47 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 6 எம்எல்ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதன் காரணமாக அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களுடைய பல 41 - ஆக குறைந்துள்ளது. மற்றொரு பக்கம் மூத்த அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் என பலரும் கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகி வருகின்றனர். இது அதிமுகவுக்கு மிகப்பெரிய பலவீனமாக பார்க்கப்படுகிறது.இந்நிலையில் தேர்தல் தோல்வி மற்றும் கட்சியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தலோசனை மேற்கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில் தஞ்சை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைப்பதற்கு நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.அவர் மீண்டும் கட்சியில் ஒன்றாக இணைத்தால் டெல்டா, தென் மாவட்டங்களில் அதிமுக பலம்பெறும் என தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக கும்பகோணம் பகுதி செயலாளர் பத்ம குமரேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் எங்கள் பகுதி பொதுமக்கள், தொண்டர்கள் சொன்ன கருத்தினை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் சொன்னேன். டிடிவி தினகரனை கட்சியில் ஒன்றாக இணைக்க வேண்டும் என்றேன்.அதற்கு இபிஎஸ் அவர் வேறொரு கட்சி நடந்து கொண்டிருக்கிறார் என பதிலளித்தார். எந்த கோபமும் இல்லாமல் சாதரணமாக தான் இதை சொன்னார். எல்லாருடைய கருத்தையும் உள்வாங்கி கொண்டார் என்றார். தொடர்ந்து பேசிய அவர் பிரிந்து இருக்கும் நாங்கள் ஒன்று சேர்ந்தால் கட்சி வலுப்பெறும். உதயநிதி ஸ்டாலின், விஜய் ஆகியோருக்கு உடனுக்குடன் கவுண்டர் கொடுப்பார் டிடிவி. அவர் கட்சியில் இணைய வேண்டுமென கீழ்மட்ட தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் விரும்புவதாக கூறினார்.இதனையடுத்து டிடிவி தினகரனை மட்டும் இணைக்க சொல்லி கேட்டீங்களா அல்லது ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரையும் இணைக்க சொன்னீங்களா என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினார்கள். அதற்கு அவர்கள் எல்லாம் கட்சியை விட்டு போயிட்டாங்க. டிடிவி தினகரனை மட்டும் தான் எல்லாரும் சொல்கிறார்கள். அவரும் எடப்பாடியும் இணைந்து செயல்பட்டால் பொதுமக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படும். மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என நம்பிக்கையுடன் அவர் தெரிவித்துள்ளார்.சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக டிடிவி தினகரனை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. அவரும் அதிமுக கூட்டணியிலே நாங்கள் தொடர்கிறோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்களை விட்டு விலக மாட்டோம் எனவும் உறுதியளித்தார். அதோடு அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்பி வர வேண்டும். அவர்களுக்காக இபிஎஸ்ஸிடம் பேசுவதற்கு நான் தயாராக இருக்கிறேன் எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

