52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
ஈரான் உடனான போர்நிறுத்த அமைதி ஒப்பந்தம் ரத்து: ட்ரம்ப் அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் திடீர் அறிவிப்பு உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பினையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஈரான் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) முடிவுக்கு வந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இனி அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்படாது என்ற அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக ஈரான், அமெரிக்கா இடையில் மீண்டும் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் காரணமாக உலக பொருளாதாரம் பெருமளவில் வீழ்ச்சியை சந்தித்தது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் பற்றாக்குறை உள்ளிட்ட பல சவால்கள் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 17-ம் தேதி பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்' கையெழுத்தானது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழிதடமான ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது. இதனால் கச்சா எண்ணெய் பற்றாக்குறை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி, பெரியளவில் விலையும் குறைந்தது. அதோடு உலக அளவில் பொருளாதாரமும் மேம்பட தொடங்கியது. இப்படியான நிலையில் ஹார்முஸ் நீரிணை அருகே வணிக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. மூன்று வணிக கப்பல்கள் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.இதற்கு பதிலடி தரும் விதமாக ஈரானில் உள்ள 80-க்கும் மேற்பட்ட இடங்களை ஏவுகணைகள் மூலமாக அமெரிக்கா தாக்கியுள்ளது. ஈரானின் வான் வழி பாதுகாப்பு அமைப்புகள், புரட்சிகர காவல் படைக்கு சொந்தமான 60-க்கும் மேற்பட்ட சிறியளவிலான படகுகள் மற்றும் கடலோர ரேடார் நிலையங்கள் ஆகியவை தாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. மேலும் ஈரான் எண்ணெய் விற்பனை செய்வதற்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு உரிமத்தையும் ரத்து செய்திருக்கிறது.அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு நேட்டோ (NATO) பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே ஆதரவு தெரிவித்திருக்கிறார். இப்படியான நிலையில் துருக்கியின் அங்காராவில் நடைபெற்று வரும் நேட்டோ (NATO) உச்சி மாநாட்டின் போது ஈரான் உடனான ஒப்பந்தம் இனி செல்லாது என தெரிவித்துள்ளார். அதாவது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சமீபத்திய ஈரானின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதன் விளைவாக ஈரான் உடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்து விட்டது. இனிமேல் அவர்களுடன் நான் எந்த விதமான தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஏற்கனவே ஈரான் உடன் பேச்சுவார்த்தை நடத்தியது "நேரத்தை வீணடிக்கும் செயல்" எனவும் டிரம்ப் காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதனையடுத்து “ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் இனி செல்லாது” என டிரம்ப் அறிவித்துள்ளது உலக நாடுகள் இடையில் பெரும் பரபரப்பினை கிளப்பியுள்ளது.இதற்கிடையில் போர் அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 6 சதவீதம் வரை அதிகரித்து ஒரு பீப்பாய் 78 டாலராக கடுமையாக உயர்ந்துள்ளது. அதோடு பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *