52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
PF திட்டத்தில் வந்துள்ள மாற்றத்தால் யாருக்கு நன்மை? இது நல்லதா கெட்டதா?

தொழிலாளர் (PF) தொடர்பான விதிகளில் அரசு ஒரு முக்கிய மாற்றத்தைப் முன்மொழிந்துள்ளது. இது பணியாளர்களின் மாதச் சம்பளத்தை அதிகரிக்கும் என்றாலும், அவர்களின் ஓய்வுக்கால நிதியையும் பாதிக்கலாம். 'வேலைவாய்ப்பு சார்ந்த ஊக்கத்தொகை' (ELI) திட்டத்தின் வரைவில் ஊழியர்கள் விரும்பினால் PF கணக்குக்கு மாதத்துக்கு 1,800 ரூபாய்க்கு மேல் பங்களிப்பதை விருப்பத் தேர்வாக மாற்ற அரசு முன்மொழிந்துள்ளது. அதாவது, தற்போது தங்கள் முழு அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி அடிப்படையில் PF பிடித்தம் செய்யப்படும் ஊழியர்கள், விரும்பினால் குறைவான தொகையைச் செலுத்தி, கையில் கிடைக்கும் சம்பளத்தை அதிகரிக்க முடியும்.இருப்பினும், இந்த முடிவை எடுப்பதற்கு முன் அதன் நீண்டகால விளைவுகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நிதி நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், இன்று கூடுதலாகக் கிடைக்கும் சம்பளம் எதிர்கால ஓய்வுக்கால நிதியை கணிசமாகக் குறைக்கும் என்கின்றனர். இந்த மாற்றம் அனைத்து PF உறுப்பினர்களுக்கும் பொருந்தாது. இது முக்கியமாக, தங்கள் உண்மையான அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி அடிப்படையில் PF பிடித்தம் செய்யப்படும் ஊழியர்களைப் பாதிக்கும். மறுபுறம், பல நிறுவனங்கள் ஏற்கனவே அரசின் சம்பள வரம்பான ரூ. 15,000 என்ற அடிப்படையில் PF பங்களிப்பைச் செலுத்துகின்றன.இந்த ஊழியர்கள் ஏற்கனவே மாதத்திற்கு ரூ. 1,800 மட்டுமே PF கணக்குக்கு பங்களிக்கிறார்கள் என்பதால், இந்தப் புதிய முன்மொழிவு அவர்களின் பங்களிப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. அரசு இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தால், தற்போது PF கணக்கில் 1,800 ரூபாய்க்கு மேல் செலுத்தும் ஊழியர்களுக்கு, அதை குறைந்தபட்ச அளவாகக் குறைப்பதற்கான வாய்ப்பு கிடைக்கலாம்.கையில் கிடைக்கும் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் 30,000 ரூபாயாக இருந்தால், அவர்கள் தற்போது மாதந்தோறும் 3,600 ரூபாயை PF கணக்குக்கு பங்களிக்கிறார்கள். புதிய விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்தப் பங்களிப்பை ரூ. 1,800 ஆகக் குறைக்கலாம். இதன் விளைவாக மாதத்திற்கு கூடுதலாக ரூ. 1,800 கிடைக்கும்.அதேபோல, ரூ. 60,000 அடிப்படைச் சம்பளம் பெறும் ஒரு ஊழியர் தற்போது PF திட்டத்தில் 7,200 ரூபாயைப் பங்களிப்பாகச் செலுத்துகிறார். அவர் குறைந்தபட்சப் பங்களிப்பைத் தேர்வுசெய்தால் அவரது கையில் கிடைக்கும் மாதச் சம்பளம் ரூ. 5,400 அதிகரிக்கும்.ஓய்வுக்கால நிதியில் இழப்பு!மாதாந்திர வருமானம் அதிகரிப்பது கவர்ச்சிகரமானதாகத் தோன்றினாலும், ஓய்வுக் காலத்தில் இது பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். PF பங்களிப்பு குறைவதால் ஒவ்வொரு மாதமும் குறைவான தொகையே சேமிக்கப்படுவது மட்டுமல்லாமல் அதன் மீதான வட்டி மற்றும் கூட்டு வட்டி மூலம் கிடைக்கும் பலன்களும் குறையும். மதிப்பீடுகளின்படி, ரூ. 30,000 அடிப்படைச் சம்பளம் பெறும் ஒரு ஊழியர் ஒவ்வொரு மாதமும் PF கணக்கில் ரூ. 1,800 குறைவாகச் செலுத்தினால் அவரது ஓய்வுக்கால நிதி 20 ஆண்டுகளில் ரூ. 10.7 லட்சமும், 30 ஆண்டுகளில் ரூ. 27 லட்சமும் குறையும்.அதேபோல, ரூ. 60,000 அடிப்படைச் சம்பளம் பெறும் ஊழியர் ஒருவர் மாதந்தோறும் ரூ. 5,400 குறைவாகப் பங்களித்தால், அவர் 20 ஆண்டுகளில் ரூ. 32 லட்சத்தையும், 30 ஆண்டுகளில் ரூ. 81 லட்சத்தையும் இழக்க நேரிடலாம். எதிர்காலத்தில் சம்பளம் உயர்ந்தால் இந்த இழப்பு இன்னும் அதிகமாக இருக்கும். 30 வயதில் PF பங்களிப்பைக் குறைக்கும் ஒரு ஊழியர் ஓய்வுபெறும் காலத்திற்குள் ரூ. 1 கோடிக்கும் அதிகமான தொகையை இழக்க நேரிடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.ஓய்வூதியம் மற்றும் வரியில் தாக்கம்!நிபுணர்களின் கருத்துப்படி, இந்த முன்மொழிவு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனெனில், EPS திட்டத்துக்கான முதலாளியின் பங்களிப்பு ஏற்கனவே ரூ. 15,000 என்ற சம்பள வரம்பின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது. எனவே, பெரும்பாலான ஊழியர்களின் எதிர்கால ஓய்வூதியம் பாதுகாப்பாகவே இருக்கும். இருப்பினும், பழைய வரி முறையைத் தேர்ந்தெடுக்கும் ஊழியர்கள், PF பங்களிப்பு குறைவதால் பிரிவு 80C-இன் கீழ் கிடைக்கும் வரி விலக்கு பலனை இழக்க நேரிடலாம். எனவே, அவர்கள் PPF, ELSS, NPS அல்லது பிற தகுதியான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் அந்த வரிச் சேமிப்பு இழப்பை ஈடுசெய்ய வேண்டியிருக்கும்.புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்!உடனடியாகக் கூடுதல் பணம் தேவைப்படும் ஊழியர்களுக்கோ அல்லது தங்கள் மாதச் சேமிப்பை PPF, NPS அல்லது மியூச்சுவல் ஃபண்ட் SIP போன்ற நீண்டகாலத் திட்டங்களில் ஒழுக்கமான முறையில் முதலீடு செய்யக்கூடியவர்களுக்கோ மட்டுமே PF பங்களிப்பைக் குறைப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று நிதி நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், வருங்கால வைப்பு நிதியைத் தங்கள் முதன்மையான ஓய்வுக்கால சேமிப்பாகக் கருதுபவர்களுக்கும், கூடுதல் நிதியைத் தொடர்ந்து முதலீடு செய்ய இயலாதவர்களுக்கும், தற்போதைய நடைமுறையின் கீழ் அதில் தொடர்ந்து அதிக பங்களிப்பைச் செய்வது ஒரு சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *