மத்திய கிழக்கு நாடுகளில் நிலைமை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், சவூதி அரேபியா மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களின் பிரத்யேகப் புகைப்படங்கள் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பிபிசியின் அமெரிக்கக் கூட்டு நிறுவனமான சிபிஎஸ் (CBS) இந்தத் திகைப்பூட்டும் புகைப்படங்களைக் கைப்பற்றி வெளியிட்டுள்ளது. இந்தச் சான்றுகளில், மத்திய கிழக்குப் பகுதியில் செயல்பட்டு வரும் பல்வேறு அமெரிக்க ராணுவ மையங்கள் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் கடுமையாக உருக்குலைந்துள்ளதும், அங்கிருந்த முக்கியக் கட்டமைப்புகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதும் தெள்ளத்தெளிவாகப் பதிவாகியுள்ளது.
ஈரானின் இந்த அதிரடித் தாக்குதலால் அமெரிக்கப் படைகளுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சேதம் குறித்து சர்வதேச அரசியல் அரங்கில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன. வல்லரசு நாடான அமெரிக்கா இந்தச் சம்பவத்திற்கு எத்தகைய தீவிர பதிலடியைக் கொடுக்கப் போகிறது என்ற அச்சமும் எதிர்பார்ப்பும் உலக நாடுகளிடையே அதிகரித்துள்ளதால், மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.